விஜயகாந்த் நல்லவர்; அவர் மீது தனி மரியாதை உள்ளது - உதயநிதி ஸ்டாலின்
விஜயகாந்த் மிகவும் நல்லவர்; அவர் மீது தனி மரியாதை உள்ளது; ஆனால் அவரை வைத்து அதிமுக ஆதாயம் தேடுகிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "பிரதமர் மோடி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழக புயல் பாதிப்புக்கு நிவாரணத்தை கொடுக்காமல் குஜராத்தில் பட்டேல் சிலையை திறக்க 3 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்துள்ளார் மோடி. அவரை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக உள்ளனர்.
மக்களது வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சத்தை வழங்கவில்லை. திடீரென ரூ.500, ரூ.1,000 பணம் செல்லாது என அறிவித்து, மக்களை வெயிலில் அவதிப்பட செய்ததில் பலர் உயிரிழந்தனர்.
பிரதமர் மோடி உலகம் சுற்றும் வாலிபர். 45 நாடுகளுக்கு 55 முறை சென்றுள்ளார். இறற்காக ரூ.2,500 கோடி விமான பயணத்துக்கு செலவாகியுள்ளது. நீட் தேர்வை கொண்டு வந்ததின் பலனாக மாணவி அனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
ராகுல் காந்தி பிரதமரானால், அவர் பிரதமர் பதவி ஏற்றபிறகு போடும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து தான்.
விஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவது வருத்தத்திற்குரியது. அவர் மீது எனக்கு தனி மரியாதை உள்ளது" என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
newstm.in
newstm.in