போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர்!
பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட விவகாரத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித் பெண் பத்திரிக்கையாளர் ஒருவரின் கன்னத்தில் தட்டியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த விவகாரம் தொடர்பாகவும் அந்த பெண் பத்திரிக்கையாளர் குறித்தும் நடிகரும், பா.ஜ.கவைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் அவதூறான கருத்தை பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அந்த சர்ச்சைக்குரிய பதிவை எஸ்.வி.சேகர் நீக்கினார். இது தொடர்பாக அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
வழக்கு விசாரணைக்காக கைது செய்யப்படலாம் என்ற நிலையில் எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கில், முன் ஜாமின் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்க மறுத்துவிட்டது. அவரை போலீசார் கைது செய்யலாம் என்று உயர் நீதிமன்றம் கூறியும் அவர் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அவர் போலீஸ் பாதுகாப்புடன் வலம் வந்துகொண்டிருக்கிறார். தொடர்ந்து, உச்ச நீதிமன்றமும் அவரது முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக எஸ்.வி.சேகர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது.
அதன்படி, எஸ்.வி.சேகர் இன்று காலை 10 மணிக்கு எழும்பூர் நீதிமன்றத்திற்கு வந்தார். அவரை கைது செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தியிருந்த நிலையில், இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். எஸ்.வி.சேகர் ஆஜராவதையொட்டி எழும்பூர் நீதிமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
newstm.in