இலவு காத்த கிளி ஸ்டாலின், வாலறுந்த நரி தினகரன்: ஜெயக்குமார் அட்ராசிட்டி!
ஸ்டாலின் இலவு காத்த கிளியாகவும், அவருக்கு துணையாக தினகரன் வாலறுந்த நரியாகவும் இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில், மீன்பிடி தடை காலங்களில், மீனவ பெண்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மீன்பிடி தடை காலங்களில் மீனவ பெண்களுக்கு உதவும் வகையில் மாதம் 4,500 ரூபாய் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து முதல்வர் மீதான வழக்கு குறித்து பதிலளிக்கையில், "முதல்வர் பொறுத்தவரையில் எந்த விசாரணையும் எதிர்கொள்ள தயார் என ஏற்கனவே கூறியுள்ளார். எந்த தவறும் இல்லாத சூழலில் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எதையும் எதிர்கொள்ள அ.தி.மு.க தயார்" என்றார்.
அதேபோன்று தலித் மாணவியின் கொலை தொடர்பாக, 'குற்றத்தின் தன்மை கருதி சட்டத்தின் அடிப்படையில் அதிகப்படியான தண்டனை வாங்கிக்கொடுக்க அ.தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்கும்' என பதிலளித்தார்.
பின்னர் இடைத்தேர்தல் குறித்து சமீபத்தில் ஒரு பத்திரிக்கை கருத்துக்கணிப்பு நடத்தியது குறித்து, 'பத்திரிகையில் வரும் கருத்து கணிப்பை கொண்டு நாம் எதையும் தீர்மானிக்க முடியாது. தகுந்த நேரத்தில் மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள். மேலும் என்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
தொடர்ந்து, 'கமல் இடைத்தேர்தலில் போட்டியிடுவது, அ.தி.மு.கவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத்தயார். மக்கள் நீதி மய்யம் 2% ஓட்டு மட்டுமே வாங்க முடியும். ரஜினி அரசியலுக்கு வந்தாலும், கட்சி ஆரம்பித்தாலும் அ.தி.மு.க ஓட்டில் எந்த பாதிப்பும் இருக்காது. கவலைப்பட வேண்டியது தி.மு.க தான்.
ஸ்டாலின் இலவு காத்த கிளியாகவும், அவருக்கு துணையாக தினகரன் வாலறுந்த நரியாகவும் உள்ளனர். இருவரும் பேசி முடிவெடுத்துள்ளனர். அவர்கள் கூட்டணி வைத்து ஜெயித்தால் ஸ்டாலின் முதல்வராகவும், தினகரன் துணை முதல்வராகவும் இருக்க முடிவு செய்துள்ளனர்.
ஆடியோ விவகாரத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த அ.ம.மு.க கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த ஒருவரை பிடித்திருக்கிறோம். ஆடியோவை வெளியிட்டது யார் என்று விரைவில் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்" என்று கூறினார்.
அதன் தொடர்ச்சியாக ராஜபக்சே குறித்து, 'இலங்கை அதிபராக பொறுப்பேற்றுள்ள ராஜபக்ஷே குறித்து ஜெயலலிதா ஏற்கனவே கூறியுள்ளார். அவர் கூறியதையே நாங்கள் பின்பற்றுகிறோம். தமிழ் இனத்தை கொன்ற இனப்படுகொலையாளர் அவர்" என பதிலளித்தார்.
newstm.in
newstm.in