நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் 3வது முறையாக கால நீட்டிப்பு!
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் 3வது முறையாக 4 மாதத்திற்கு கால நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக, 75 நாட்கள் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் அவரது மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக் கமிஷனை அமைத்து கடந்த 2017 செப்டம்பர் மாதம் 25ம் தேதி தமிழக அரசு ஆணை வெளியிட்டது. செப்டம்பர் 30ம் தேதி விசாரணை ஆணையத் தலைவராக நீதிபதி ஆறுமுகசாமி பதவியேற்றுக்கொண்டார். அக்டோபர் 25ம் தேதி விசாரணை தொடங்கியது.
ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரது இல்லத்தில் வேலை செய்தவர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையே, விசாரணையில் சசிகலாவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர்களை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மனு அளித்தார். ஆணையம் இதற்கும் அனுமதியளித்து, அதற்கான பட்டியலையும் வழங்கி விட்டது. அவர்களது தரப்பில் குறுக்கு விசாரணை ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கிறது.
விசாரணை ஆணையத்தின் கோரிக்கைக்கு ஏற்ப 2017 டிசம்பர் மாதம், 6 மாதங்களுக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டது. அதையடுத்து இரண்டாவது முறையாக 4 மாதங்களுக்கு கால நீட்டிப்பு செய்திருந்தது தமிழக அரசு.
இதைத்தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக 4 மாதங்களுக்கு மேலும் கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கோரிக்கை வைத்தது. அதன் தொடர்ச்சியாக, அதன்படியே 4 மாதங்களுக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த 4 மாத காலத்திற்கு பிறகாவது விசாரணை முடிவடைந்து, தமிழக அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்படுமா என்பது பொதுவான கேள்வியாக உள்ளது.
newstm.in
newstm.in