நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த முதல்வரின் கருத்து... உடன்படுவதாக சீமான் பேட்டி
வயது மூப்பின் காரணமாக தான் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்ற முதல் அமைச்சரின் கருத்துக்கு உடன்படுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் கடந்த ஆண்டு மே 19 ஆம் தேதி மதிமுகவினரும், நாம் தமிழர் கட்சியினரும் மோதிக்கொண்டது தொடர்பாக, மதிமுகவின் மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபு, கரிகாலன், அலெக்சாண்டர், இனியன் பிரகாஷ், துரைமுருகன், பர்மா குமார் என்கிற குமார், நாகேந்திரன், மணிகண்டன், ஞானசேகர், சுகன், சதீஷ்குமார், மதியழகன், கந்தசாமி ஆகிய 14 பேர், திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 4ஆம் தேதி ஆஜராகினர். அவர்களிடம் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. நவம்பர் 13ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சீமான் இன்று ஆஜரானார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வரும் ஜனவரி 7ஆம் தேதி ஆஜராக உத்தரவு பிறப்பித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், " மகாராஷ்டிராவில் பாஜக எப்படியாவது ஆட்சி அமைக்க வேண்டும் என காத்திருந்தனர். இந்நிலையில் சிவசேனாவிற்கு உரிய அவகாசம் கொடுக்காமல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க முற்படுவது திட்டமிட்ட செயல் என தெரிவித்தார்.
ரஜினியால் அரை மணி நேரம் கூட தனது நிலைப்பாட்டில் நிற்க முடியவில்லை என தெரிவித்த அவர், வயது மூப்பின் காரணமாக தான் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்ற முதல் அமைச்சரின் கருத்துக்கு உடன்படுவதாகவும், தற்போது ஒரு வெற்றிடம் உள்ளதால் தான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லும் அவர்களுடைய எண்ணம் வெளிப்படையாக தெரிகிறது என கூறினார். உள்ளாட்சித் தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி ஏற்கனவே தயாராக உள்ளது என்றும் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்த அவர், நேர்மையில்லாத கட்சிகள் தான் கூட்டணி சேர்த்து போட்டியிடுகிறார்கள் என குறிப்பிட்டார்.
பால் உரையில் திருக்குறள் இருப்பது பெருமை தான். ஆனால் வாங்குபவர்கள் படிப்பார்களா?"வரலாறு உள்ளவன் தேடுவான் இல்லாதவன் திருடுவான்" பாஜக அனைத்தையும் தனதாக்க நினைக்கிறது. ஓபிஎஸ்க்கு விருது கொடுப்பது பாராட்டக் கூடிய ஒன்று. ஆனால் அமெரிக்க வாழ் தமிழர்கள் தான் விருது கொடுக்கிறார்கள் என தெரிவித்தார். சிவாஜியின் அரசியல் குறித்த முதலமைச்சரின் கருத்து சிவாஜியை சிறுமைப்படுத்துவதாக உள்ளது என்றும் எம்ஜிஆரை போல சிவாஜிக்கு அரசியலில் நுட்பம் இல்லை. ஆனால் அவர் சிறந்த ஆளுமை உடையவர் என்றும் தெரிவித்தார்.
Newstm.in
newstm.in