அழகிரியின் அரசியல் யுத்தம்! ரீ எண்ட்ரிக்காக போடும் மாஸ்டர் பிளான்!!
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கும் பின்னர் முதன்முதலாக நாளை திமுக அவசர செயல்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் திமுக கட்சியின் நிர்வாக அமைப்பில் சில உறுப்பினர்களை மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. நிர்வாகிகள் மாற்றப்படும் இந்த சமயத்தில் தனக்கான பதவியை மு. க. அழகிரி மறைமுகமாக கேட்டுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க. அழகிரி கட்சியில் குழப்பம் ஏற்பட முயன்றதற்காக அவரை திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கினார். திமுகவுடன் கூட்டணி சேர நினைக்கும் கட்சிகளிடம் திமுகவை பற்றி அவதூறாக கூறி கூட்டணியை குலைக்க முயன்ற துரோக செயலுக்காக அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து, தன் மீதும் தனது ஆதரவாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தார். அழகிரியிடம் பேசி முடித்த அடுத்த சில நிமிடங்களிலே மு. க. அழகிரி கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் என அறிக்கை வெளியானது. கருணாநிதியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பிறகு அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையேயான மோதல் தொடங்கியது. அதன்பின் அமைதியாக இருந்த அழகிரி கருணாநிதியின் மறைந்து 7 நாட்களிலே தனது தர்மயுத்தத்தை தொடங்கியுள்ளார்.
. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு மிகப்பெரிய கட்சியான அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற எண்ணத்தில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மெரினாவில் தர்மயுத்தம் நடத்தினார். அதன்பின் தினகரனை தூக்கி எரிந்துவிட்டு அதிமுக தலைமை ஓபிஎஸ்க்கு பதவி வழங்கி தன்பக்கம் இழுத்துக்கொண்டது. இதேபோன்று திமுகவில் கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் சகோதர யுத்தம் தொடங்கியுள்ளது.
கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்ற முன்னாள் மத்திய அமைச்சரான மு. க. அழகிரி, “திமுகவில் தான் தற்போது இல்லை. தமிழகத்தில் உள்ள கருணாநிதியின் உண்மையான விசுவாகிகள் என் பக்கம்தான் உள்ளனர். திமுகவில் உள்ளவர்கள் பணத்திற்கு விலை போகிறார்கள். ஸ்டாலின் செயல்படாத தலைவராகவே உள்ளார். அப்படி செயல்பட்ட தலைவராக இருந்திருந்தால் ஆர்.கே. நகரில் டெபாசிட் இழந்திருக்க வாய்ப்பில்லை. இதற்கு காரணம் கட்சியில் தலைமை சரியாக இல்லை. அதனால் நான் கட்சி தலைமைக்கு வர வேண்டும் என திமுக தொண்டர்கள் விரும்புகின்றனர். திமுக தொண்டர்கள் சிலர் ரஜினியிடம் தொடர்பில் உள்ளனர்” என அடுக்காக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
முதலில் தினகரனுடன் திமுக கூட்டு என சொல்லப்பட்டுவந்த நிலையில் தற்போது ரஜினியுடன் கூட்டு என கூறப்பட்டு வருகிறது. கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட அழகிரி ரஜினிக்கு ஆதரவாகப் பேசியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
ஸ்டாலின்- அழகிரி சண்டையால் கட்சி பலவீனமடைந்துவிடக்கூடாது, சூழ்ச்சிகள், துரோகங்கள் என அனைத்தையும் கடந்து 50 ஆண்டுகள் கருணாநிதி கட்டிக்காத்த கட்சியை உடைத்துவிடக்கூடாது, அழகிரி அழுத்தம் கொடுத்து அதிகாரம் பெற பார்க்கிறார் என்பன போன்ற பல கருத்துகளை திமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அழகிரியின் இந்த மாஸ்டர் பிளான் ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்கவா? அல்லது ஆதரவு தெரிவிக்கவா? என்பது குழப்பமாகவே உள்ளது.
அதிமுகவைபோல் திமுகவும் பிளவு படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் ஸ்டாலின், அழகிரியை கட்சியில் மீண்டும் சேர்க்கவுள்ளார் என்றும், செயற்குழு கூட்டத்தில் அவருக்கு தனியாக பதவி அளிப்பார் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தலைமைக்கு இடம் தருவாரா? அழகிரியை கட்சியில் சேர்த்து தலைமையை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவாரா? என்பது போருக்கு பின்னரே தெரியவரும்.
newstm.in