பிச்சை எடுத்து நிதி திரட்டிய முன்னாள் முதலமைச்சர்..!
ஆந்திராவில் புதிதாக ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆட்சி அமைந்ததும் பல்வேறு திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் ஆந்திர மாநில பிரிவினைக்கு பின், தற்போதய ஆந்திர மாநிலத்திற்கு அமராவதி உள்பட விசாகப்பட்டினம், கர்ணுால் ஆகிய நகரங்களையும் மாநில தலைநகரங்களாக நிறுவும் முயற்சியில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது. மூன்று தலைநகரங்களை ஏற்படுத்துவது பற்றி அறிக்கை சமர்ப்பிக்க அமைக்கப்பட்ட குழு, தற்போதைய தலைநகர் அமராவதியை சட்டமன்ற தலைநகராகவும், விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகராகவும், கர்ணுாலை நீதி பரிபாலன தலைநகராகவும் அமைக்க பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில், அமராவதியில் ஒட்டுமொத்த தலைநகரத்தை ஏற்படுத்த அரசுக்கு, 32 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கொடுத்த விவசாயிகள், அரசின் மூன்று தலைநகரம் என்ற முயற்சிக்கு எதிராக, 24 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு, தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., இடது சாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.
இந்நிலையில், இக்கட்சிகள் இணைந்து ஏற்படுத்தியுள்ள அமராவதி தலைநகர கூட்டு போராட்ட குழு, தங்களுடைய போராட்டத்தை மாநிலம் முழுவதும் எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளன. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக திருப்பதிக்கு வந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டு போராட்ட குழுவினர், திருப்பதி நகர வீதிகளில் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து, அமராவதி தலைநகர போராட்டத்திற்கு நிதி திரட்டினர்.
newstm.in