1. Home
  2. தமிழ்நாடு

சிறுமியை வீடியோ காலில் நிர்வாணமாக பதிவு செய்து மிரட்டல்.. பல பெண்களை ஏமாற்றியது அம்பலம்

சிறுமியை வீடியோ காலில் நிர்வாணமாக பதிவு செய்து மிரட்டல்.. பல பெண்களை ஏமாற்றியது அம்பலம்

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சாய் (எ) ராஜசிவசுந்தர் (29) சென்னை கோயம்பேடு, திருமுல்லைவாயல், ஆவடி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். பிடெக் பட்டதாரியான இவர், செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடும்போது வண்ணாரப்பேட்டை சீனிவாசபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், ராஜசிவசுந்தருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, தனது பெயர் சந்துரு என்றும், பிளஸ் 2 படித்து வருவதாகவும் கூறியுள்ளார். இவர்கள் ஆன்லைனில் சாட்டிங் செய்து வந்தனர்.

சில நாட்களுக்கு பிறகு, ராஜசிவசுந்தர் அந்த சிறுமியிடம், ‘‘உன்னை காதலிக்கிறேன்’’, என கூறியுள்ளார். ஆரம்பத்தில் மறுத்த சிறுமி, பின்னர் காதலை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, செல்போன் எண்ணை பெற்று இருவரும் காலித்து வந்துள்ளனர். அடிக்கடி வீடியோ காலிலும் பேசி வந்துள்ளனர். அப்போது, ஆடையின்றி போஸ் கொடுக்கும்படி சிறுமியிடம் ராஜசிவசுந்தர் கூறியுள்ளார். காதலன்தானே என நினைத்து சிறுமி ஆடையின்றி வீடியோ காலில் போஸ் கொடுத்துள்ளார். அதை தனது செல்போனில் ராஜசிவசுந்தர் பதிவு செய்துள்ளார்.

சில நாட்கள் கழித்து ராஜசிவசுந்தர், சிறுமியிடம், ‘‘உன்னை நேரில் சந்திக்க வேண்டும் கோயம்பேடு வா,’’ என கூறியுள்ளார். ஆனால், சிறுமி அங்கு செல்லவில்லை. இதனால் கோபமடைந்த ராஜசிவசுந்தர், வீடியோ காலில் எடுத்த சிறுமியின் ஆபாச படத்தை சிறுமியின் செல்போனுக்கு அனுப்பி, ‘‘நான் அழைக்கும் இடத்துக்கு வர மறுத்தால், இதை இணையதளத்தில் வெளியிடுவேன்,’’ என மிரட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி இதுகுறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் தாய், செல்போனில் ராஜசிவசுந்தரிடம் பேசினார்.

அப்போது, ‘‘ரூ.5 லட்சம் கொடுத்தால், உனது மகளின் ஆபாச படத்தை அழித்து விடுகிறேன். தர மறுத்தால், அந்த படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன்,’’ என கூறியுள்ளார். அதற்கு சிறுமியின் தாய், ‘‘தற்போது அவ்வளவு பணம் எங்களிடம் இல்லை. பணத்தை புரட்டி தருகிறோம்,’’ என கூறியுள்ளனர். ஆனால், அவ்வளவு தொகையை புரட்ட முடியவில்லை. இதனிடையே, பணம் கேட்டு ராஜசிவசுந்தர் அடிக்கடி தொல்லை செய்து வந்துள்ளார். இதனால், வேறு வழியின்றி சிறுமியின் தாய் வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
அதன்படி விசாரணை நடத்திய காவல்துறையினர், சிறுமியின் சித்தப்பா பேசுவதாக ராஜசிவசுந்தரிடம் செல்போனில் பேசியுள்ளனர். அப்போது, ‘‘நீ கேட்ட பணத்தை தயார் செய்து விட்டோம். அதை எங்கு வைத்து தரவேண்டும்,’’ என கேட்டுள்ளனர். அதற்கு, கோயம்பேடு வரும்படி ராஜசிவசுந்தர் கூறியுள்ளார். அதன்படி போலீசார் கோயம்பேடு சென்றனர். அங்கு ராஜசிவசுந்தரை மடக்கிபிடித்து விசாரித்தனர். பின்னர் அவரிடமிருந்து 3 செல்போன், ஒரு லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை சோதனை செய்தபோது, மேலும் 11 பெண்களை ஆபாச படம் எடுத்து ஏமாற்றி பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது. பின்னர், போக்சோ சட்டத்தின்கீழ் ராஜசிவசுந்தரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like