கள்ளச்சாவி மூலம் பைக் திருட முயன்ற இளம்பெண்கள்.. போதைக்கு அடிமையானதால் கைவரிசை
சென்னை திருவல்லிக்கேணி எல்லிஸ் சாலை தாயர் சாகிப்பில் வசிப்பவர் யாசர் அரஃபாத்(26). இவர் வேலைக்குச் சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். தனது இருசக்கர வாகனத்தை வீட்டுக்கு அருகே அருகே எப்போதும் நிறுத்துவது வழக்கம். யாசர் அராஃபத் தனது வீட்டில் சிசிடிவி கேமராக்களை வைத்துள்ளார். அதை வீட்டில் உள்ள திரையில் அவர் பார்ப்பது வழக்கம். வீட்டுக்கு வந்த அவர் சாப்பிட்டு விட்டு ஓய்வாக சிசிடிவி கேமரா காட்சியை பார்த்தபோது அதிர்ந்துபோனார். அதில் தெரிந்த காட்சியில் வீட்டுக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் அருகே இரண்டு இளம்பெண்கள் நிற்பது தெரிந்தது. பின்னர் இளம்பெண்கள் இருவரும் கள்ளச் சாவிபோட்டு வாகனத்தை திருட முயற்சி செய்வதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அவர் வெளியே வருவதை அறிந்த ஒரு பெண் தப்பி ஓடிவிட்டார். மற்றொரு பெண்ணை யாசர் அராஃபத் பிடித்துக்கொண்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அந்தப்பெண்ணை பிடித்துக்கொண்டனர். பின்னர் அண்ணா சாலை போலீஸாருக்கு தகவல் அளிக்க அங்கு வந்த போலீஸாரிடம் அப்பெண்ணை ஒப்படைத்தனர். பிடிபட்ட பெண்ணிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் பெயர் மோனிஷா(20)என்பதும் தப்பி ஓடிய தோழியின் பெயர் சந்தியா(19) என்பதும் தெரியவந்தது. இருவரும் திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டது தெரியவந்தது. மோனிஷாவை கைது செய்த போலீஸார் தப்பியோடிய சந்தியாவை தேடி வருகின்றனர். போதைப்பழக்கத்துக்கு ஆளானதால் செலவுக்காக வாகனத்தை திருட முயற்சித்ததாக மோனிஷா தெரிவித்ததாக கூறப்படுகிறது.
newstm.in