பஜ்ஜி சாப்பிட்டதால் பெண் பலி.. பஜ்ஜியால் இவ்வளவு ஆபத்தா?.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..
சென்னை, சூளைமேடு காமராஜர் தெருவில் வசிப்பவர் கங்காதரன் (48). இவரது மனைவி பத்மாவதி (45). கங்காதரன் வேலைக்குச் சென்றிருந்த நிலையில் மாலையில் பத்மாவதி தனது தாயாருடன் பஜ்ஜி வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது பஜ்ஜி பத்மாவதியின் தொண்டையில் சிக்கியது. இதனால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் அவருக்குத் தண்ணீர் கொடுத்தார். ஆனால், தண்ணீரை அருந்தும் நிலையில் அவர் இல்லை. மூச்சுக்குழலில் பஜ்ஜி அடைத்ததால் அவர் மயக்க நிலைக்குச் சென்றார்.
இதையடுத்து பத்மாவதியின் தாயார் அக்கம்பக்கத்தினரை அழைக்க, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. பத்மாவதியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்தபோது ஏற்கெனவே பத்மாவதி உயிரிழந்தது தெரியவந்தது. இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் அவ்வப்போது நிகழ்கிறது.
மாவுப்பொருட்களை உண்ணும்போது சிறிது சிறிதாக உண்ண வேண்டும். போன் பேசுவது, சத்தமாக பேசிச் சிரிப்பது, தண்ணீர் வைத்துக்கொள்ளாமல் சாப்பிடுவது போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும். உணவின் கெட்டித்தன்மை தொண்டையில் சிக்கும்போது மூச்சுக்குழலும் தொண்டையில் ஒரே பாதையில் இருப்பதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் நேரக் காரணமாக அமைகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
newstm.in