தமிழகத்தில் வாஜ்பாயின் அஸ்தி எந்தெந்த இடங்களில் கரைக்கப்படுகிறது?
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை தமிழகத்தின் 6 இடங்களில் கரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.கவின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 16 அன்று உயிரிழந்தார். அதற்கு மறுநாள் ராணுவ குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் டெல்லி ஸ்ம்ரிதி ஸ்தல் என்ற இடத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இதையடுத்து வாஜ்பாயின் அஸ்தி கலசங்களை வழங்கும் நிகழ்வு இன்று டெல்லி பா.ஜ.க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தியா முழுவதும் உள்ள பா.ஜ.க மாநிலத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா அஸ்தியை வழங்கினர். 29 மாநிலத் தலைவர்களும், 9 யூனியன் பிரதேச தலைவர்களும் அஸ்தியை பெற்றுக்கொண்டனர். அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு பகுதியில் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்படுகிறது.
வாஜ்பாயின் அஸ்தியை தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்கவும், அங்கு பொதுமக்கள், பா.ஜ.க தொண்டர்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முன்னதாக தெரிவித்திருந்தார். டெல்லி சென்றுள்ள அவர் வாஜ்பாயின் அஸ்தியை பெற்றுக்கொண்டு இன்று இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து வாஜ்பாயின் அஸ்தி பா.ஜ.க அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு, நாளை(ஆகஸ்ட் 23) அஞ்சலிக்காக வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து நாளை மாலை 6.30 மணிக்கு வாஜ்பாயின் அஸ்தி பா.ஜ.க மூத்த தலைவர்கள் தலைமையில் சென்னை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், ஈரோடு பவானி ஆகிய 6 இடங்களில் கரைக்கப்படுகிறது. கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திருச்சியில் முன்னாள் எம்.பி. இல.கணேசன், ராமேஸ்வரத்தில் எச்.ராஜா, ஈரோட்டில் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், மதுரையில் கே.என்.லட்சுமணன் மற்றும் எம்.ஆர்.காந்தி ஆகியோரும் தலைமை தங்குகின்றனர்.
சென்னையில் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில், அடையாறு ஆறு கடலில் கலக்கும் இடத்தில் கரைக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. நாளை மறுநாள் 26ம் தேதி காலை 11 மணிக்கு வாஜ்பாயின் அஸ்தி 6 இடங்களிலும் ஒரே நேரத்தில் கரைக்கப்படுகிறது.
newstm.in