வேலூர் தொகுதி தேர்தல் ரத்து? - தேர்தல் ஆணையம் பதில்!
தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், வேலூரில் துரைமுருகனின் நண்பருக்கு சொந்தமான சிமெண்ட் கிடங்கில் ரூ.11.53 கோடியும், துரைமுருகன் வீட்டில் ரூ.10 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
தொடர்ந்து, வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளரும், துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்த் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கதிர் ஆனந்தின் வீட்டில் இருந்து அதிக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, தேர்தல் செலவின உதவியாளர் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, பணப்பட்டுவாடா நடந்திருக்கலாம் என்பதால் வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படும் என்ற ஒரு வதந்தி மக்களிடையே பரவி வருகிறது.
இன்று இது தொடர்பாக, பதிலளித்த தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் ஷெய்பாலி சரண், "வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து குறித்து இதுவரை தேர்தல் ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. வேலூரில் பணம் கைப்பற்றபட்டது குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. எனவே, மக்கள் தேவையில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
newstm.in
newstm.in