நாளை சூப்பர்மூன் + முழு சந்திரகிரகணம் .. எங்கெல்லாம் தெரிகிறது?
முழு சந்திரகிரகணமும், சூப்பர் மூன் எனப்படும் ராட்சத நிலவும் நாளை உலகின் பல்வேறு இடங்களில் தெரிய உள்ளது. இதைத் தொடர்ந்து, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு சந்திரகிரகணம் இருக்காது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவுக்கும் சூரியனுக்கும் நடுவே பூமி ஒரே கோட்டில் வரும்போது, சூரியனின் வெளிச்சத்தை பூமி மறைத்து, பூமியின் நிழலில் நிலவு இருக்கும் குறிப்பிட்ட நேரம் சந்திரகிரகணம் என அழைக்கப்படுகிறது. பாதி சந்திரகிரகணத்தை ஆண்டுக்கு இரண்டு முறை பார்க்கலாம். ஆனால், முழு சந்திரகிரகணத்தை காண்பது அரிது. ஆனால், நாளை உலகின் பல்வேறு இடங்களில், முழு சந்திரகிரகணத்தை மக்கள் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த முழு சந்திரகிரகணத்தின் போது, நிலவின் மீது படும் சூரியனின் வெளிச்சத்தை பூமி முற்றிலும் மறைத்துக் கொள்ளும். அதே நேரத்தில், சூரிய வெளிச்சம், பூமியின் வளிமண்டலத்தில் பட்டு திரிந்து நிலவை தொடும். இது நடக்கும் போது, நிலவு ஆரஞ்சு நிறத்தில் தோற்றமளிக்கும்.
இதுபோன்ற முழு சந்திரகிரகணம் காண்பதே அரிது என்ற நிலையில், பூமிக்கு மிக அருகில் நிலவு நகர்கிறது. இதனால், சூப்பர்மூன் எனப்படும் பெரிய தோற்றத்தில் நிலவு காட்சியளிக்கும். சூப்பர்மூனை ஆரஞ்சு நிறத்தில் பார்க்க, பொதுமக்களும், விண்வெளி ஆர்வலர்களும் உலகின் பல்வேறு பகுதிகளில் தயாராகி வருகின்றனர். இந்திய நேரப்படி நாளை காலை 9 மணியளவில் பாதி சந்திர கிரகணம் துவங்கும். 10.11 மணி முதல் சுமார் 62 நிமிடங்களுக்கு முழு சந்திரகிரகணத்தை காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது, வடஅமெரிக்கா, தென்னமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், ஐஸ்லாந்து, கிரீன்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தெரியும். ஆசிய நாடுகள், நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் சந்திரகிரகணத்தை காண முடியாது.
அடுத்த முழு சந்திர கிரகணத்தை 2021 மே மாதம் வரை காண முடியாதாம்.
newstm.in
newstm.in