டிசம்பர் 4ம் தேதி தி.மு.க தலைமையில் போராட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு
மேகதாதுவில் கர்நாடக அரசு அணைக்கட்டுவதற்கான வரைவு அறிக்கையை மத்திய அரசு ஓப்புதல் அளித்ததற்கு கண்டனம் தெரிவித்து வரும் டிசம்பர் 4ம் தேதி தி.மு.க தலைமையில் அனைத்துக்கட்சிகள் கலந்து கொள்ளும் போராட்டம் நடைபெறுகிறது.
குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணை கட்ட சாத்தியக்கூறு உள்ளிட்ட பல தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது. இந்த அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இதனை எதிர்த்து தமிழக அரசும் மனு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையில் மத்திய அரசை எதிர்த்து இன்று அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, முஸ்லீம்லீக் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டனர்.
அந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், "அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அனைவரையும் அழைக்க கூடிய அளவுக்கு நேரம் இல்லை. இன்று நடந்த கூட்டத்தில் முதலாவதாக கஜா புயலில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
காவிரியின் குறுக்கே #Mekedatu–வில் அணைகட்ட பாஜக அரசு அனுமதி வழங்கியிருப்பது குறித்து ஆலோசிக்க, கழக தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) November 29, 2018
பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், சமூகநல அமைப்புகள் பங்கேற்பு. pic.twitter.com/e8XXmmn0dO
பின்னர் ஓரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடனடியாக தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு கூட்டத்தை மாநில அரசு கூட்டி சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றி, மேகதாது விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடக மாநிலத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதற்கு எதிராக தி.மு.க தலைமையில் அனைத்துக் கட்சிகள் கலந்து கொள்ளும் கண்டன போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் திருச்சியில் நடைபெறுகிறது. நியாயமாக இது டெல்டா பகுதியில் தான் இந்த போராட்டம் நடந்திருக்க வேண்டும். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அந்த பகுதியில் போராட்டம் நடத்த முடியாது. ஆனால் திருச்சியும் டெல்டாவுக்கு கீழ் தான் வருகிறது. இதில் விவசாயிகளும், மக்களும் திரளாக கலந்து கொள்ள இருக்கின்றனர். இதில் அனைத்துக் கட்சிகளும் விருப்பம் இருந்தால் கலந்து கொள்ளலாம். யார் வந்தாலும் வரவேற்கிறோம்" என்றார்.
newstm.in
newstm.in