எயட்ஸ் குறித்த விழிப்புணர்வுக்கான சமூக ஆர்வலரின் தனி முயற்சி!!
கோவை : எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதற்காக, அதன் விளைவுகளை உணர்த்தும் வாசகங்களை வரைந்த கருப்பு உடையை அணிந்து வீதியில் இறங்கி முயற்சித்து வருகிறார் சமூக ஆர்வலர் ராஜா சேது முரளி.
எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும், டிசம்பர் மாதம் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தினத்தின் மையக் கருத்து “சமூக பங்களிப்பின் மூலம் எய்ட்ஸ் தடுப்பு பணியில் மாற்றத்தினை ஏற்படுத்துதல்” என்பதே ஆகும்.
இதை தொடர்ந்து, உலக எய்ட்ஸ் தினமான இன்று, எய்ட்ஸ் நோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வோடு கூடிய எச்சரிக்கையை ஏற்படுத்தும், வாசகங்கள் வரைந்த உடையை அணிந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சமூக ஆர்வலர் ராஜா சேது முரளி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இதனிடையில், பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் , எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை புறக்கணிக்காமல், அவர்களை அரவணைக்க வேண்டும் என்றும், அவரை தொடுவதால் எய்ட்ஸ் நோய் பரவாது என்றும் கூறியுள்ளார்.
மேலும், எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட ஒருவரை கடித்த கொசு , நம்மை கடித்தால் நோய் தொற்று ஏற்படாது எனவும், அவர்களிடம் பாசமாகவும் அன்பாகவும், பேசுவதினாலோ, பழகுவதாலோ, ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதாலோ எய்ட்ஸ் நோய் பரவாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோர்களுக்கு எய்ட்ஸ் நோய் இருந்தால், குழந்தைகளுக்கு வராமல் தடுக்க மருந்துகள் இருப்பதாக கூறிய அவர், எய்ட்ஸ் இல்லாத தேசத்தை உண்டாக்குவதற்காக கடந்த 20 வருடங்களாக எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, இந்தியாவில் தற்போது எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்க குறைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Newstm.in
newstm.in