ரூ. 4,000 கோடி மோசடி! சேலத்தில் சிபிஐ சோதனை!!
நிதி நிறுவனம் நடத்தி 4,000 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சேலத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரி வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பெங்களூரு, சிவாஜி நகரைச் சேர்ந்தவர் மன்சூர்கான் (45). இவர், கடந்த 2006ல், பெங்களூருவில் ஐ.எம்.ஏ., நிதி நிறுவனத்தை துவங்கினார். அதில், முதலீடு செய்வோருக்கு, வட்டியுடன் தங்க நகைகள் தருவதாக, கவர்ச்சி விளம்பரம் வெளியிட்டார். இதை நம்பி, கர்நாடகா, தமிழகம் உட்பட, தென் மாநிலங்களைச் சேர்ந்த, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முதலீடு செய்தனர்.
ஆனால், நகை, பணத்தை வழங்காமல், சுமார் 4,000 கோடி மோசடி செய்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதில், மன்சூர்கான் உட்பட 21 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், பெங்களூரில் பணிபுரியும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும், மோசடியில் தொடர்புள்ளது தெரியவந்தது.
இதில், பெங்களூரு வருமான வரித்துறை அலுவலகத்தில், சொத்து மதிப்பீடு பிரிவு உதவி ஆணையரான சேலத்தைச் சேர்ந்த குமார் (48) என்பவரும் ஒருவர். இந்நிலையில் சேலம், அழகாபுரம், பெரியசாமி நகரிலுள்ள குமாரின் வீடு, சோனா நகரிலுள்ள மற்றொரு வீடு, அதே பகுதியிலுள்ள தோட்டம் ஆகியவற்றில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், பல்வேறு ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், பணம், நகைகளை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Newstm.in
newstm.in