‘25 பைசாவுக்கு பிரியாணி பார்சல்’ அலைமோதிய கூட்டத்தில் திக்குமுக்காடிய ஊழியர்கள்...
‘25 பைசாவுக்கு பிரியாணி பார்சல்’ என்ற அசத்தல் ஆஃபரால் உணவகத்தில் அலைமோதிய கூட்டம்... திக்குமுக்காடிய ஹோட்டல் ஊழியர்கள்...
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி சாலையோரம் ‘ஆர்.ஆர் வீட்டுமுறை உணவகம்’ என்ற பெயரில் புதிதாக ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தை பிரபலமடைய செய்ய வெறும் செய்திகள் மட்டும் போதாது என்பதை உணர்ந்த ஹோட்டல் உரிமையாளர், வாடிக்கையாளரை ஈர்ப்பதற்காக அசத்தல் ஆஃபர் ஒன்றை அறிவித்தார். அந்த அசத்தல் ஆஃபரை நிச்சயம் யாராலும் மறக்க முடியாது. ஏனெனில் ரூ.25 பைசா கொடுத்தால் பிரியாணி வழங்கப்படும் என்பது தான் அந்த ஆஃபர். தற்போது 25 பைசா செல்லாது என்பது அனைவரும் அறிந்தது. கூடவே ஒரு சில நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. காலை 11 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பிரியாணி வழங்கப்படும் என்றும் ஒரு நபருக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் என்றும் முதலில் வரும் 100பேருக்கு மட்டுமே பிரியாணி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ஆஃபரை கண்ட மக்கள் கூட்டம் ஹோட்டலில் அலைமோதியது. இதனால் ஹோட்டல் ஊழியர்கள் திக்கமுக்காடி ஒருவழியாக அனைவருக்கும் பார்சல் கட்டி கொடுத்துவிட்டனர். இது குறித்து கடை உரிமையாளர் தெரிவித்தபோது, விளம்பரத்துக்காகவே 25 பைசா என அறிவித்தோமே தவிர, வேறு எந்த காரணமும் இல்லை என்றும், செல்லாக்காசாக இருந்தாலும் எங்களின் முதல் வருமானம் 25 பைசாதான்’ எனவும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மேலும், 100 பேருக்கு பிரியாணி வழங்க நினைத்திருந்தோம் ஆனால் 300-க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் 200 பேரிடம் 25 பைசாவை வாங்கிவிட்டு பிரியாணி பார்சலை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
Newstm.in
newstm.in