செய்தியாளர் பிரசன்னாவின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!
வீட்டின் குளிர்சாதனப் பெட்டி வெடித்து விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்த பிரபல தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தாம்பரம் அருகே சேலையூரில் ஒரு வீட்டில் இருந்து நேற்று காலை புகை வெளிவந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் வசிப்பவர்கள் , தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், தீயணைப்புத்துறையினர் வந்து பார்த்ததில், வீட்டில் இருந்த குளிர்சாதனப்பெட்டி வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் செய்தியாளர் பிரசன்னா, அவரது மனைவி அர்ச்சனா, அவரது தாயார் ரேவதி உள்ளிட்ட 3 பேரும் உயிரிழந்தனர்.
செய்தியாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் மறைவுக்கு பல்வேறு பத்திரிக்கையாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இரங்கல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரசன்னாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.
newstm.in
newstm.in