புத்தாண்டு போதை.. கொண்டாட்டம்.. ரேஸ்.. அப்புறம் என்ன?.. இளைஞர் மருத்துவமனையில் அனுமதி
சென்னை பள்ளிக்கரணையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து விட்டு குடிபோதையில் அதிவேகமாக இயக்கப்பட்ட இருசக்கர வாகனம் மோதி தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது.
சென்னையை அடுத்த நன்மங்கலம் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் புத்தாண்டு கொண்டாடிவிட்டு அதிகாலை நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். குடிபோதையில் இருந்த அவர் அதிவேகமாக தனது இருசக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது.
பள்ளிக்கரணை - வேளச்சேரி சாலையில் வந்தபோது திடீரென நிலைத்தடுமாறிய வாகனம் சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பெட்ரோல் கசிந்ததால் இருசக்கர வாகனத்தில் மளமளவென தீப்பிடித்தது. இதையடுத்து காயமடைந்த நவீனை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in