மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்! விடிய விடிய நடந்த போராட்டம்!
டெல்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நேற்று(டிச.15) நடைபெற்ற போராட்டத்தின்போது மாணவா்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது இச்சட்டத்தை மத்திய அரசு திரும்பபெற வேண்டும் என அவர்கள் முழக்கம் எழுப்பினர். இதனிடையே, போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் மாணவர்கள் - காவல்துறையினர் இடையே மோதல் ஏற்பட்டது.
மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதலை அரங்கேற்றினர். இதனையடுத்து அங்கு பேருந்துகளுக்கு தீவைக்கப்பட்டது. ஆனால் பேருந்துகளுக்கு தீவைக்கப்பட்டதால் தான் தடியடி நடத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளையில், வன்முறையில் ஈடுபட்டது காவல்துறை தான் என்றும் வாகனங்களுக்கு தீவைத்தது காவல்துறை என்றும் மாணவர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
எனினும் இதற்கு ஆதாரம் தங்களிடம் உள்ளதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து விடிய விடிய மாணவர்கள் போராட்டம் நடத்தினர். டெல்லி காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு மாணவர்கள் குவிந்து கண்டன முழக்கம் எழுப்பினர். விடிய விடிய நடைபெற்ற போராட்டம் காரணமாக டெல்லி நகர் பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது.
இதனிடையே, டெல்லி மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பேரணியாக செல்ல முயன்ற அவர்களை பல்கலைக்கழக வாயில் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். எனினும் தடுப்புகளை மீறி செல்ல முற்பட்டதால், தடியடி நடத்திய காவல்துறை பின்னர் கண்ணீர் புகைக்குண்டுகளையும், தண்ணீரையும் பீய்ச்சி அடித்து மாணவர்களை கலைத்தது. இந்நிலையில், பல்கலைக்கழகத்துக்கு ஜனவரி 5 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பதிவாளர் அபிபுல்லா கான் கூறியுள்ளார்.
newstm.in