மார்ச் 1 முதல் திரையரங்குகள் இயங்காது!
தற்போது தமிழகத்தில் திரைப்படங்களுக்கு 8% வரியை மாநில அரசு விதித்து வருகிறது. இந்த 8 சதவிகித மாநில வரியை வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தமிழக அரசு திரும்பப் பெறாவிட்டால் மார்ச் 1-ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட திரையரங்க உரிமையாளர் சங்க ஆலோசனை கூட்டம் கோவையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ‘உச்ச நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களின் தோல்வியை இனி அந்த படத்தில் நடித்த நடிகர்கள் ஏற்று தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் , திரையரங்க உரிமையாளர்களின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும். அப்படி நஷ்டத்தை சரி செய்யாத நடிகர்களின் படங்களை இனி திரையிட மாட்டோம். அதே போல், எந்தவொரு தயாரிப்பாளரும் திரையரங்குகளில் படம் வெளியான 100 நாட்களுக்குள் டிஜிட்டல் தளத்தில் ( அமேசான், நெட் ஃபிளீக்ஸ்) படத்தை வெளியிடக் கூடாது என்றும் தீர்மானம் போடப்பட்டுள்ளது.
அப்படி 100 நாட்களுக்குள் தயாரிப்பாளர்கள், படங்களை டிஜிட்டலில் வெளியிட்டால் அந்த தயாரிப்பாளர்களின் படத்தை திரையரங்குகளில் இனி வெளியிடமாட்டோம். தமிழக அரசின் 8% சதவீத மாநில வரியை வரும் பிப்ரவரி மாத்திற்குள் திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் வரும் மார்ச் 1 ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்படும்” என்று கூறினார்.
newstm.in
newstm.in