அன்று கேரள முதல்வர் பினராயி, இன்று ரஜினிகாந்த்: கலக்கும் பிரணவ்
கேரளாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரணவ், ரஜினிகாந்தை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரணவுக்கு இரண்டு கைகள் கிடையாது. இதனால், தனது கால்களை கைகளாக மாற்றிக்கொண்டு அதன் மூலம் பல சாதனைகளை புரிந்துள்ளார். சமீபத்தில் பிரணவ் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து, கேரள மாநில நிவாரணத்துக்கு நிதியளித்தபோது, தனது கால்கள் மூலம் முதலமைச்சருக்கு கைகுலுக்கி வணக்கம் வைத்தார். முதலமைச்சரும் அவரின் கால்களை பிடித்து குலுக்கினார். பின்னர் இருவரும் செல்பி எடுத்துக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து, இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி, முதலமைச்சரை பலரும் பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்தை பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த பிரணவ், இன்று போயஸ்கார்டன் இல்லத்தில் அவரை சந்தித்தார். பிரணவின் விருப்பத்தை தெரிந்த ரஜினி, தன்னை சந்திக்கவருமாறு அழைப்புவிடுத்திருந்தார்.
இந்த சந்திப்பின்போது, பிரணவிற்கு சால்வை போட்டு ரஜினி வரவேற்றார். இதன்பின், பிரணவ் தனது கால்களால் ரஜினிக்கு கைகொடுக்க, அத்துடன் கால்களால் வரைந்த ரஜினி ஓவியத்தையும் அவருக்கு பிறந்தநாள் பரிசாக அளித்தார். இதன்பின் இருவரும் செல்பி எடுத்துக்கொண்டனர். பிரணவ் கால்களால் செல்பி எடுத்தார். அந்த புகைப்படங்கள் எல்லாம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
newstm.in
newstm.in