சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்ற கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள்!
தங்களது ராஜினாமா கடிதங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சபாநாயகருக்கு எதிராக அதிருப்தி காங்கிரஸ் - ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடுத்துள்ளனர்.
கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், ஆளும் கட்சி மீது அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் -ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் 14 பேர் தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர்.
விடுமுறை முடிந்து கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் நேற்று பேரவைக்கு திரும்பினார். எம்.எல்.ஏக்கள் நேரில் வந்து உரிய விளக்கம் அளித்தால் ராஜினாமா கடிதங்கள் பரிசீலனை செய்யப்படும் என்று அவர் பதில் அளித்துள்ளார்.
இதற்கிடையே, ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்வதுடன், அடுத்த 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு தடை விதிக்கவும் சபாநாயகர் ரமேஷ் குமாரிடம், காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில், தங்களது ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அதிருப்தி காங்கிரஸ் - ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனால் மும்பையில் நட்சத்திர ஓட்டலில் இருந்த எம்.எல்.ஏக்கள் டெல்லிக்கு படையெடுத்துள்ளனர். தங்களது ராஜினாமாவை ஏற்காமல் சபாநாயகர் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார் என்று மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுதவிர காங்கிரஸில் இருந்து மேலும் சில எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.
newstm.in
newstm.in