என் மகளின் மரணத்துக்கு நீதி கிடைத்துள்ளது.. பிரியங்காவின் தந்தை
ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் பாலத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகள் எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
தெலுங்கானாவை சேர்ந்த 26 வயதுடைய பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி, கடந்த 27ஆம் தேதி வழக்கம் போல் மருத்துவமனைக்கு சென்று விட்டு இருசக்கரவாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, வழியில் வாகனத்தின் டயர் பஞ்சர் ஆகி உள்ளது. உடனே அவரது தங்கைக்கு போன் செய்து, வரும் வழியில் டயர் பஞ்சர் ஆகிவிட்டதாகவும், அடையாளம் தெரியாத இரண்டு பேர் வாகனத்துக்கு பஞ்சர் போட உதவி செய்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னோடு தொடர்ந்து பேசி கொண்டு இருக்கும்படியும், அவர்களை பார்த்தால் தனக்கு பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இவ்வாறு இருவரும் செல்போனில் பேசிக்கொண்டிருந்த சில நிமிடங்களில் அவரது செல்போன் ஆஃப் ஆகியுள்ளது. இதையடுத்து அவரது தங்கை மீண்டும் முயற்சித்தபோது, சுவிட்ச் ஆஃப் என வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தங்கை வீட்டில் தெரிவித்ததையடுத்து, அவரது குடும்பத்தினர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல்துறையினர் அவரைத் தேடும் பணியை தீவிரப்படுத்தினர். மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, பிரியங்கா தனது வாகனத்தை ஓட்டிக் கொண்டு செல்லுவதும், அங்கே 2 லாரி ஓட்டுநர்கள் டயர் பஞ்சர் ஆகிவிட்டதாக கூறி, அவருக்கு உதவி செய்ய முன்வந்ததும் பதிவாகியிருந்தது. இதையடுத்து, சம்பவம் நடந்த பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் மறுதினம் பெண்மருத்துவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என நாடு முழுவதும் குரல் எழுப்பப்பட்டது. இந்த வழக்கில் விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்யும் வகையில், சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க அங்குள்ள நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக மருத்துவர் எரித்து கொல்லப்பட்ட இடத்திற்கு4 பேரும் அழைத்துச்செல்லப்பட்டனர். அப்போது, என்ன நடந்தது என்பதை செய்து காட்டும் படி கூறிய போது, அவர்கள் தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, 4 பேரையும் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா ரெட்டியின் தந்தை என் மகள் இறந்து 10 நாட்கள் ஆன நிலையில் தற்போது, என் மகளின் மரணத்திற்கு நீதி கிடைத்துள்ளது. அவளின் ஆன்மா சாந்தியடையும் என தெரிவித்துள்ளார். மேலும், தெலுங்கான போலீசார் மற்றும் அரசுக்கு நன்றி கூறியுள்ளார். இது குறித்து பிரியங்காவின் தங்கை கூறுகையில், போலீசாரின் எண்கவுண்டர் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
Newstm.in
newstm.in