சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு; வடகிழக்கு பருவமழை இந்தாண்டு அதிகம் பெய்தது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வடகிழக்கு பருவமழை கடந்தாண்டை விட அதிகமாக பெய்துள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை தொடர்பாக, சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலடுக்கு சுழற்சியால் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்பட 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி, கடலூர், ஈரோடு, நீலகிரி, கோவை தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். குமரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை என 7 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதியில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்; சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. லட்சத்தீவு உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியில் சூறாவளிக்காற்று வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 19 செ.மீ., மழை பதிவாகியுள்ளது என்றும், கடலூர், தூத்துக்குடி, குறிஞ்சிப்பாடியில் தலா 17செ.மீ., மணிமுத்தாறில் 15 செ.மீ., வேதாரண்யத்தில் 14 செ.மீ., மழை பதிவாகியுள்ளது என்றும் வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மேலும், வங்கக்கடலில் புயல் சின்னம் எதுவும் உருவாகவில்லை என்று தெரிவித்த அவர், வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 8 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளதாகவும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இயல்பு அளவான 39 செ.மீ.,க்கு பதிலாக 42 செ.மீ., வரை மழை பெய்துள்ளதாகவும் வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார்.
newstm.in
newstm.in