பிரச்னைகளை தெளிவுப்படுத்த முதல்வருடனான பேச்சுவார்த்தை உதவியாக இருந்தது: கிரண்பேடி
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பிரச்னைகளை தெளிவுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் பேச்சுவார்த்தை உதவியாக இருந்ததாக அந்த மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில், 39 கோப்புகளில் துணை நிலை ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தி, முதலமைச்சர் நாராயணசாமி கடந்த 6 நாட்களாக ஆளுநர் மாளிகை முன்பு தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். பல இழுபறிக்கு பின் முதலமைச்சர், ஆளுநர் கிரண்பேடியை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 4.30 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
பின்னர். பேச்சுவார்த்தை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், " துணை நிலை ஆளுநர் கிரண்பேடியிடம் 39 கோப்பு மட்டுமல்லாது பல பிரச்சனைகள் குறித்தும் பேசப்பட்டது என்றும், பஞ்சாலை தொழிலாளர்கள் பிரச்சனை உள்ளிட்டவை பற்றியும் பேசப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், ரோடியர் மில்லை மூடும் முடிவை மறுபரிசீலனை செய்ய துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இலவச அரிசி திட்டத்தில் பணமில்லாமல் அரிசியாக வழங்க பரிசீலனை செய்யப்படும் என கூறியதாகவும், காவலர் தேர்வுக்கான வயது உச்ச வரம்பை 24 ஆக உயர்த்த உள்துறையிடம் பேசுவேன் எனவும் அவர் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.
பொதுத்துறை ஊழியர்கள் ஊதிய பிரச்னை தொடர்பாக வரும் 22 -ஆம் தேதி டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் நாராயணசாமி, தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் என நம்புவதாகவும் கூறினார்.
இதனிடையே, முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளருடனான பேச்சுவார்த்தை, பிரச்சைனைகளை தெளிவுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் உதவியாக இருந்ததாக, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார்.
newstm.in
newstm.in