கமல் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!
கமல்ஹாசன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் கமல் மீது பல்வேறு காவல் நிலையங்களில் இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதையடுத்து கமல்ஹாசன், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நேற்று மனு அளித்தார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தற்போது விடுமுறைக் காலம் என்பதால் விசாரணைக்கு தடை கோரும் வழக்கை இப்போது விசாரிக்க முடியாது என்றும், வேண்டுமானால் முன்ஜாமீன் கோரி மனு அளித்தால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்றும் பதில் தெரிவித்தது.
அதன்படி, முன்ஜாமீன் கோரி அளித்த மனு இன்று நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கமல் பொதுவான ஒரு கருத்தை தான் கூறியதாகவும், எந்த மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கமல்ல என்றும் அவரது தரப்பில் கூறப்பட்டது.
விசாரணை முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
newstm.in
newstm.in