தமிழகத்தில் 256 இடங்களில் ‘பேட்டரி சார்ஜிங்’ மையங்கள்! சென்னையில் 141 இடங்களில் அனுமதி!
தமிழகத்தில் காற்று மாசு அடைவதை தடுக்கும் முயற்சியாக பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், மோட்டார் வாகனங்களால் ஏற்படும் புகை மாசுவை குறைப்பதற்காக பேட்டரி வாகனங்களை பயன்படுத்தும் படி மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தியதை அடுத்து, மாநில அரசும் பேட்டரி வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
பேட்டரி வாகனங்களை வாங்குவதற்கு மத்திய அரசு மானியமும் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் பேட்டரி வாகனங்களை ‘சார்ஜிங்’ செய்வதற்கான மையங்களையும் அமைத்து வருகிறது. தற்போது 62 நகரங்களில் பேட்டரி வானங்களுக்கான 2,636 ‘சார்ஜிங்’ மையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து தகவல் தெரிவித்த மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், ‘சார்ஜிங்’ மையங்கள் அமைப்பதன் மூலம் மின்சார வாகனங்களை பயன்படுத்துபவர்களின் நம்பிக்கை அதிகரிப்பதுடன், புதிய மின்சார வாகனங்கள் அறிமுகம் ஆவதற்கான வாய்ப்புகளும் ஏற்படும் என்றார்.
இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் 256 இடங்களில் ‘சார்ஜிங்’ மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அதன்படி சென்னையில் 141 இடங்களிலும், கோவையில் 25ம், மதுரையில் 50ம் அமைக்கப்படும் என்றும், வேலூர், சேலம், ஈரோடு மற்றும் தஞ்சை பகுதிகளில் தலா 10 மையங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
newstm.in
newstm.in