அண்ணா பல்கலை. மறுகூட்டலில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.400 கோடி முறைகேடு!
அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்தாள் மறுகூட்டலில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.400 கோடி ஊழல் நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் ரூ.700 பணம்
செலுத்தி மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பர். இதில் விடைத்தாள் நகலுக்கு ரூ.300, மேலும் மறுகூட்டலுக்கு ரூ.400 எடுத்துக்கொள்ளப்படும். கடந்த ஆண்டுகளில் ஏராளமான மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர்.அதே நேரத்தில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த பிறகு அவர்களின் மதிப்பெண்கள் மற்றும் கிரேடுகளில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது மாணவர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
கடந்த 2017ம் ஆண்டு சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். இதில், சுமார் 73,000 மாணவர்கள் மறுகூட்டலில் தேர்ச்சி பெற்றனர். 16,000 பேர் அதிக மதிப்பெண் பெற்று நம்ப முடியாத அளவுக்கு கிரேடு உயர்ந்தது. இந்த மறுகூட்டலில் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்குவதற்காக, மாணவர்களிடமிருந்து பணம் வாங்கியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இதில் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி உமா உள்ளிட்ட சிலர் சிக்கினார்.
இதைத்தொடர்ந்து உமா உட்பட 10 பேர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்க உள்ளது.கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ. 400 கோடி ஊழல் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் துணைவேந்தர் ஒருவரும் சிக்குவார் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். தமிழக கல்வித்துறையில் இந்த அளவுக்கு எந்த ஊழலும் நடைபெற்றத்தில்லை என மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
newstm.in