கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலன் கொலை.. செல்போன் சிக்னல் மூலம் சிக்கிய பெண்!
சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்த நபரை ஆந்திரா மாநிலத்திற்கு வரவழைத்து கணவருடன் சேர்ந்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (43). இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த மாதேஸ்வரி (30) தனது தம்பியை பார்பதற்காக அடிக்கடி அனகாபுத்தூர் வந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பக்கத்து வீட்டில் இருக்கும் கார்த்திகேயனுக்கும் மாதேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் கள்ளக்காதல் உருவாகி 2 ஆண்டுகளாக தொடர்ந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் மாதேஸ்வரி விருப்பத்திற்கு மாறாகவும் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து மாதேஸ்வரியின் சகோதரருக்கு தெரிய வந்துள்ளது. மாதேஸ்வரியை ஆந்திராவுக்கு அனுப்பிவைத்த அவரது சகோதரர், இது குறித்து ஆந்திராவில் உள்ள மாதேஸ்வரியின் கணவர் சிவகுமாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். மனைவி மாதேஸ்வரியிடம் சிவக்குமார் இதுபற்றி விசாரிக்க, கார்த்திகேயன் தான் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கார்த்திகேயனை ஆந்திரா வரவழைத்த மாதேஸ்வரி தன் கணவருடன் சேர்ந்து அவரை கட்டையால் அடித்துக்கொலை செய்துள்ளார்.
பின்னர் கார்த்திகேயனின் உடலை வீட்டின் அருகே புதைத்துள்ளனர். மகனை காணவில்லை என கார்த்திகேயனின் தாய் அளிந்திருந்த புகாரின் அடிப்படையில் போலீசார் செய்த விசாரணையில் மாதேஸ்வரி சிக்கியுள்ளார். கார்த்திகேயனின் செல்பொன் சிக்னல், கடைசியாக ஆந்திராவில் இருந்ததை வைத்து போலீசார் துப்புதுலக்கியுள்ளனர். பின்னர் மாதேஸ்வரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து கொலையாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
newstm.in