105 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு வெளியே வருகிறார் ப.சிதம்பரம்!
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரம் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்த நிலையில் ஐஎன்எக்கஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த அக்.16ஆம் தேதி ப.சிதம்பரத்தை கைது செய்தது. இதனால் ஜாமீன் அளித்து சிறையில் இருந்து ப.சிதம்பரம் வெளிவரமுடியாத நிலை உருவானது.
இதையடுத்து ப.சிதம்பரம் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. அதில், ''2 லட்சம் ரூபாய்க்கு சொந்த ஜாமீனும் அதே தொகைக்கு நிகராக மற்றொருவர் ஜாமீனும் அளிக்க வேண்டும், நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் சிதம்பரம் வெளிநாடு செல்லக்கூடாது. அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், வழக்கு தொடர்பாக ஊடங்களுக்கு பேட்டியளிக்கக் கூடாது. வழக்கில் தொடர்புடையவர்களை சந்தித்து பேசக்கூடாது'' உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ப.சிதம்பரம் சிறைக்கு சென்று 105 நாட்கள் ஆகும் நிலையில், தற்போது அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கிலும் சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்துள்ளதால், அவர் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Newstm.in
newstm.in