இளம்பெண்ணை கடத்தி 2 நாட்களாக தனி வீட்டில் அடைத்து சித்ரவதை..
தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தை சேர்ந்த சக்திவேல் - வசந்தா தம்பதிக்கு நான்கு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சக்திவேலை விட்டுப்பிரிந்த வசந்தா திருப்பூரில் தனியாக வசித்து வருகிறார். சக்திவேலின் ஒரு மகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பூரில் உள்ள தாய் வசந்தா வீட்டுக்கு சென்றுவிட்டு இரண்டு நாட்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.
அப்போது, கலைச்செல்வியை மர்மநபர்கள் சிலர் கடத்திச்சென்றதாகவும், பின்னர் செட்டியாபத்து கிராமத்தில் உள்ள வீட்டின் முன்பு விட்டுச்சென்றதாகவும் தெரிகிறது.
இரண்டு நாட்களாக அவருக்கு உணவு வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. கண் திறக்க முடியாமல் மிகவும் சோர்ந்து காணப்பட்ட கலைச்செல்வியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, உடன்குடி - காலன்குடியிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தலை முடி அறுக்கப்பட்டு, கையில் சூடு போட்ட காயங்களுடன் இருந்த கலைச்செல்வி, தன்னை மர்ம நபர்கள் சிலர் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறினார். இதுகுறித்து குலசேகரம்பட்டினம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பின்னரே இளம்பெண்ணுக்கு என்ன நடந்தது? மர்மநபர்கள் யார் என்ற விவரம் தெரியவரும் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முதற்கட்ட விசாரணையில் அப்பெண்ணை காதலித்து வந்த அய்யப்பன் தான் இச்செயலில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
newstm.in