இளம் தம்பதியின் 4 மாத குழந்தை விற்பனை: பெண்ணின் பெற்றோர் மீது புகார்!
சேலத்தில் இளம் தம்பதியின் 4 மாத குழந்தையை 3 லட்சத்திற்கு பெண்ணின் பெற்றோரே விற்பனை செய்துவிட்டதால் குழந்தையை மீட்டு தரகோரி தம்பதியினர் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
சேலத்தை அடுத்த ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் ராஜா மற்றும் மீனா தம்பதியினர். இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் உள்ள பணியன் கம்பெனியில் ஒன்று வேலை பார்த்து அங்கே வசித்து வருகின்றனர். மீனாவிற்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த உடன் மீனா உடல் நலம் பாதிக்கப்பட்டதால், குழந்தையை மீனாவின் பெற்றோரான சாந்தி மற்றும் பொன்னுசாமியிடம் ஒப்படைத்து பராமரிக்குமாறு கூறியுள்ளனர்.
மீனாவிற்கு உடல் நலம் சரியானதும் அவரது பெற்றோரிடம் குழந்தையை கேட்டுள்ளார். அப்போது அவரது பெற்றோர்கள் குழந்தை தங்களிடம் இல்லை என்றும், குழந்தையை வேறொருவரிடம் வளர்க்க கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அங்கு சென்று விசாரித்தபோது, குழந்தையை 2 மாதத்திற்கு முன்பே 3 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, இளம் தம்பதியினர் குழந்தையை 3 லட்சத்திற்கு விற்பனை செய்துவிட்டதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், குழந்தையை மீட்டு தரக்கோரி இளம்தம்பதியினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இளம் தம்பதியரின் 2 மாத குழந்தையை பெண்ணின் பெற்றோரே விற்பனை செய்துள்ளதாக கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Newstm.in
newstm.in