கள்ளக்காதல் பிரச்னையால் பெண்ணை தாக்கிய காவலர் கைது!
புதிதாக பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டம் கடையத்தில் காவல்நிலையம் எதிரே பெண்ணை தாக்கிய போக்குவரத்து காவலர் கைது செய்யப்பட்டார்.
கடையம் காவல் நிலையம் எதிரே முப்புடாதி என்ற பெண் கணவரை பிரிந்து தாய் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடையம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்திக்கு அந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, கடையம் காவல் நிலையத்தில் இருந்து இடமாறுதல் பெற்று வீரவநல்லூரில் தட்சிணாமூர்த்தி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அப்பெண்ணிற்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதற்கு காவலர் தட்சிணாமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்து வந்தார். எனினும் அதனை ஏற்காததால் ஆத்திரம் அடைந்த காவலர், காவல்நிலையம் எதிரே உள்ள முப்பிடாதியின் வீட்டிற்கு சென்று கத்தியால் தாக்கினார். இதில் தலை, கழுத்து பகுதியில் காயமடைந்த அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே பெண்ணை தாக்கிய காவலர் தட்சிணாமூர்த்தியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in