பெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன?
நாமக்கல் அருகே பெண்ணை கடத்த முயன்ற போது, அதனை தடுக்க முயன்ற மூதாட்டி ஆசிட் வீச்சில் பலியானதோடு, கடத்தலில் ஈடுபட்ட நபரும் உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையத்தை சேர்ந்த விஜயாவுக்கும், தருமபுரியை சேர்ந்த சாமுவேல் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜயாவின் உறவுகார பெண்ணின் மீதும் சாமுவேல் ஆசை கொண்டு தவறாக அணுகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வசந்தி, தருமபுரியில் இருந்து நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கும் சென்ற சாமுவேல், வசந்தியைக் கடத்த திட்டமிட்டு ஆசிட் மற்றும் கத்தியுடன் வீட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. வசந்தியை தன்னிடம் அனுப்புமாறு மூதாட்டி தனத்தை சாமுவேல் மிரட்டிய நிலையில் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்றனர். அப்போது, மூதாட்டி தனத்தின் மீது சாமுவேல் ஆசிட் ஊற்றியதில் அவர் உயிரிழந்தார்.
பின்னர் அந்த இளைஞரை பிடித்து பொதுமக்கள் அடித்து உதைத்ததில் காயமடைந்த சாமுவேல் மயக்கம் அடைந்து விழுந்துள்ளார். பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது சாமுவேல் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. மூதாட்டியை கொன்ற நபர் தாக்குதலில் உயிரிழந்ததால் சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
newstm.in