திருச்சி விமான நிலையம்: இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அவசர கால ஊர்தி!
திருச்சி விமான நிலையத்திற்கு ரூ. 4.10 கோடி மதிப்பீட்டில் புதிய தீயணைப்பு மற்றும் அவசர கால ஊர்தி இங்கிலாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
செம்பட்டு திருச்சி விமான நிலையத்தில் பல்வேறு விதமான வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக விமான நிலையத்தின் மின் செலவினங்களை குறைக்கும் வகையில் ஒரு மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் சோலார் தகடுகள் அமைக்கப்பட்டு கடந்த வாரம் அதற்கான மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.
இதன் அடுத்த கட்டமாக திருச்சி விமான நிலையத்திற்கு இங்கிலாந்து நாட்டிலிருந்து ரூ. 4.10 கோடிக்கு புதிய தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு வாகனம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகனமானது 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீரினை பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் பயன்படுத்தும் வேகமானது அதிக அளவில் இருக்கும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று காலை மும்பையிலிருந்து திருச்சிக்கு தனி லாரி மூலம் இந்த வாகனம் கொண்டுவரப்பட்டது.
மேலும் தீப்பற்றும் பகுதிகளில் தீ பரவாமல் மிக விரைவான முறையில் அணைப்பதற்கான உபகரணங்கள் இந்த வாகனத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனமானது விமான நிலையத்தில் ஏற்படும் அவசர கால தேவைக்கு பயன்படுத்துவதற்கும், தீ பரவுவதை கட்டுப்படுத்துவதற்கும் உபயோகப்படுத்தப்பட உள்ளது.
newstm.in
newstm.in