காட்டழகிய சிங்கப்பெருமாள் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் உபகோயிலாக விளங்கும் அருள்மிகு காட்டழகிய சிங்கப்பெருமாள் 15 நூற்றாண்டுகளுக்கு முந்தையது என கூறப்படுகிறது.
இரணியனை அழித்து பிரகலாதனைக் காப்பாற்றி அருளிய எம்பெருமானின் அவதாரமாக விளங்கும் நரசிம்ம பெருமாளை யானைகள் சூழ்ந்து காடுகள் நிறைந்த இப்பகுதியில் யானைகளிடமிருந்து பொதுமக்களையும், விளை நிலங்களையும் காக்க பெரியாழ்வாரின் சீடனாக விளங்கும் வல்லப தேவபாண்டியன் நிறுவியதுடன், காட்டை திருத்தி சீரமைத்த ஆலயம் என்பதால் காட்டழகிய சிங்கப்பெருமாள் என்ற பெயர் பெற்ற இவ்வாலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இவ்வாலயத்தின் கும்பாபிஷேக பூஜைகளானது கடந்த 27ஆம்தேதி மாலை அனுக்ஞை மற்றும் வாஸ்து பூஜைகளை நடைபெற்று, தொடர்ந்து காவிரியிலிருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு 28ஆம்தேதிமுதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இன்றையதினம் காலை 7ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று மகாபூர்ணா ஹதியுடன் நிறைவடைந்தது.
அதனைத் தொடர்ந்து யாகசாலையிலிருந்து கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க பட்டாச்சார்யார்களால் சுமந்துவரப்பட்டு பின்னர் வேதமந்திரங்கள் முழங்கிட தனூர் லக்னத்தில் லக்ஷ்மி நரசிம்மர் மற்றும் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மஹாசம்ப்ரோக்ஷனம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கர்ப்பகிரகத்தில் புனிதநீர் ஊற்றி பின்னர் மங்கள ஹாரத்தியும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு வழிபாடு செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறநிலையத்துறையினர் மேற்கொண்டிருந்தனர், மேலும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
newstm.in
newstm.in