பட்டாசு ஆலையில் பயங்கரம்.. சட்டவிரோதமாக திரி தயாரித்தபோது விபத்து.. 2 பேர் உடல் கருகியது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சட்டவிரோதமாக திரி தயாரித்தபோது பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
வெம்பக்கோட்டை அருகே உள்ள செவல்பட்டி கிராமத்தில் பரமசிவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் நேற்று வழக்கம்போல் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.சரவெடி தயாரிப்பு பணியின்போது பட்டாசு திரியில் ஏற்பட்ட திடீர் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் அம்மையார்பட்டியைச் சேர்ந்த ராமசாமி (34), கணேசன் (49) ஆகியோர் உடல் முழுவதும் தீயில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டனர். மேலும் ஆலையில் இருந்த 5 கட்டிடங்கள் சேதமடைந்தன. காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய பட்டாசு ஆலையின் உரிமையாளர், மேலாளரை தேடி வருகின்றனர். இதனிடையே சட்டவிரோதமாக திரி தயாரிக்கும் பணி நடைபெற்றதாக கூறப்படுகிறது.
newstm.in