சேலம்: ஹெல்மட் வடிவில் மாணவிகள் அணிவகுப்பு... உலக சாதனை முயற்சி !
சேலத்தில் உலக சாதனை முயற்சிக்காக நடைபெற்ற மகளிருக்கான தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் ஹெல்மெட் வடிவில் அணிவகுத்து நின்று அசத்தினர்.
முப்பதாவது சாலை பாதுகாப்பு வார விழா கடந்த வாரம் தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டது. சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, கடந்த 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அந்த வகையில் மகளிருக்கான தலைக்கவச விழிப்புணர்வு மாபெரும் உலகசாதனை நிகழ்ச்சியானது சேலம் பெரியார் பல்கலைக்கழகம் எதிரே உள்ள தனியார் மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர் மற்றும் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தை வேலு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் நான்காயிரத்து ஐம்பது கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு, இருசக்கர வாகனங்களை ஓட்டும் மகளிர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி ஹெல்மெட் வடிவில் அணிவகுத்து நின்று அசத்தினர்.
ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பிரதிநிதி சதீஷ், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
newstm.in