உள்ளாட்சி தேர்தல்: கும்பகோணத்தில் அதிமுக சார்பில் 993 பேர் விருப்பமனு தாக்கல்!
கும்பகோணம் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 993 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் தலைமை அறிவித்திருந்ததது. இதையடுத்து தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் விருப்பமனுக்களை 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஏராளமானோர் வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா ஆகியோரிடம் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.
கும்பகோணம் நகர் மன்றத் தலைவர் பதவிக்கு, முன்னாள் நகர் மன்றத் தலைவர் ரத்னா சேகர் மனு தாக்கல் செய்துள்ளார். இவர் நகர் மன்றத் தலைவராக இருந்த போது தான், தமிழகத்திலேயே சிறந்த நகராட்சி என்ற விருதினை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
இதே போன்று, தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், அம்மாப்பேட்டை பகுதிகளில் உள்ள உள்ளாட்சி இடங்களுக்கான கும்பகோணம் நகராட்சி தலைவர் பதவிக்கு 6 பேரும் நகர் மன்ற உறுப்பினர் பதவிக்கு 92 பேரும் மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்கு 54 பேரும், ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 436 பேரும், பேரூராட்சி தலைவர் பதவிக்கு 40 பேரும், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு 365 பேரும், அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
Newstm.in
newstm.in