பங்களாவில் கட்டுக்கட்டாக பதுக்கப்பட்ட செல்லாத ரூபாய் நோட்டுகள் பறிமுதல்..
கோவையில் சொகுசு பங்களா ஒன்றில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், செல்லாத பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை வடவள்ளி லட்சுமி நகரில் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான பங்களாவை, ஷேக், ரஷீத் ஆகிய இருவர் வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர். ரகசிய தகவலின் பேரில் பேரூர் டி.எஸ்.பி. வேல்முருகன் தலைமையில் போலீசார் அங்கு சென்றபோது இருவரும் தலைமறைவாகி விட்டனர். அங்கு சோதனையிட்டதில் ஒரு அறைகளில், செல்லாத பழைய 500, மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் 268 கட்டுகள் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அவற்றைப்பிரித்து பார்த்த போது அதில் மேலேயும், அடியிலும் மட்டும் ரூபாய் நோட்டுகளும், இடையே வெள்ளைத்தாளும் இருப்பது தெரியவந்தது. ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூபாய் 2 லட்சத்து 68 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தப்பியோடிய இருவரும் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், செல்லாத நோட்டுகளை எதற்காக பதுக்கி வைத்தனர், இரட்டிப்பு பண மோசடி கும்பலைச் சேர்ந்தவர்களா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
newstm.in