சாலை விபத்தில் பெற்றோர் கண்முன்னே மகள் பலி..
ராமநாதபுரம் அருகே தாய், தந்தை கண்முன்னே பள்ளி சிறுமி சாலை விபத்தில் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் வசிப்பவா் அஜீத்குமார் - கெரன் தம்பதி. இவா்களது 3 வயது மகள் புளோரன்ஸ் ப்ராங்க்ளின் . அஜீத்குமாரும் அவரது மனைவியும் ஆசிரியராக பணிபுரியும் தனியார் பள்ளியில் அவரது மகள் படித்து வந்தார். இன்று காலை லேசான மழை பெய்தப்போதும் மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளனர். அவா்கள் கீழக்கோட்டை எனும் இடத்தில் செல்லும்போது அவ்வழியே வந்த கார் ஒன்று இவர்களது இருசக்கர வாகனத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் மூவரும் தூக்கிவீசப்பட்டனர். அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். சிறுமியின் தாய், தந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாய், தந்தை கண்முன்னே விபத்தில் சிறுமி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே விபத்து ஏற்படுத்திய கார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in