மரத்தை வெட்டியதால் இன்ஞினியரை வெட்டிய கொடூரம்! கோவையில் பரபரப்பு!
கோவையில் வீட்டில் தனியே வசித்து வந்த மென் பொறியாளர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பக்கத்து வீட்டுக்காரரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் குறிச்சி கல்லுக்குழி வீதியைச் சேர்ந்த மென்பொறியாளர் சக்திவேல் கடந்த 22ஆம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மனைவியைப் பிரிந்து உறவினர்கள் யாருடனும் தொடர்பில் இல்லாமல் தனித்து வாழ்ந்து வந்த சக்திவேல், தனது சகோதரியுடன் மட்டும் பேசி வந்துள்ளார். கொலை தொடர்பாக தனிப்படை அமைத்த போலீசார், பல்வேறு நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அவரது எதிர் வீட்டுக்காரரான ஆனந்த்குமார் என்பவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஆனந்த்குமாரைப் பிடித்து போலீசார் தங்கள் பாணியில் விசாரித்த போது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. வீட்டின் அருகே இருந்த மரத்தை வெட்டியது தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. அதன் பின்னர் அடிக்கடி இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படும் நிலையில், சம்பவத்தன்றும் குடிபோதையில் இருந்த ஆனந்குமாருக்கும் சக்திவேலுவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தனது நண்பர்களுடன் சேர்ந்து சக்திவேலை கட்டையால் தாக்கியும் கத்தியால் குத்தியும் ஆனந்குமார் கொலை செய்துள்ளார்.
கொலை செய்து விட்டு உடலை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளனர். பணம், நகைக்காக அரங்கேறிய கொலை போன்று சித்தரிப்பதற்காக வீட்டிலிருந்த செல்போன், 7 சவரன் நகைகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை அவர்கள் எடுத்துச் சென்றனர். போலீசாருக்கு சந்தேகம் எழக்கூடாது என்பதற்காக கொலை செய்து விட்டு தலைமறைவாகாமல் கடந்த 4 மாதங்களாக அதே பகுதியில் சுற்றி வந்துள்ளனர். தற்போது கொலை தொடர்பாக ஆனந்த்குமார், வைத்தியலிங்கம், சரவணன், சின்னதுரை ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளானர்.
newstm.in