போதிய உபகரணங்கள் இன்றி கழிவுநீர் கால்வாயை சுத்திகரிக்கும் அவலம்: பொதுமக்கள் கண்டனம்
போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல், கழிவுநீர் கால்வாயை பெண் துப்புரவு தொழிலாளர்களை கொண்டு சுத்தம் செய்த வீரகனூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுக்கா, வீரகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கு சொற்ப அளவிலான பணியாளர்களே உள்ளனர். இந்த மழை காலத்தில் கழிவு நீர் கால்வாயில் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனை அப்புறப்படுத்தும் வேலைகளில் வீரகனூர் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். நேற்று முன்தினம் வீரகனூர் பேரூராட்சிக்குட்பட்ட சொக்கனூர் பகுதி-14வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாயை பெண் துப்புரவு பணியாளர்களை அனுப்பி, எந்த ஒரு சுகாதாரம் சார்ந்த பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காமல் தூர்வார வைத்துள்ளனர்.
இந்த துப்புரவு பணியாளர்களும் பணியை தட்டிக்கழிக்க முடியாமல் அதிகாரிகளுக்கு பயந்து வேலையைச் செய்துள்ளனர். சுகாதார சீர்கேட்டால் தமிழகமெங்கும் நோய் தொற்றுகள் பரவி வரும் நிலையில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தனது உடல் நிலையையும் கவனத்தில் கொள்ளாமல் இந்த பெண் துப்புரவு பணியாளர்கள் தன்னலம் பாராது உழைத்தது பாராட்டத்தக்க விஷயமாக இருந்தாலும், மனசாட்சி உள்ள பொதுமக்கள் எவராலும் இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது நிதர்சனம். இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும், தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்திற்கும் புகார் அனுப்பப்பட இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் வார்டுக்கு 10 துப்புரவு பணியாளர்கள் விகிதம் பணிக்கு அமர்த்தி அவர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி அதன் பின்னர் துப்புரவு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Newstm.in
newstm.in