காவு வாங்கும் பாதாள சாக்கடை: தொடரும் உயிர் பலி!
கும்பகோணத்தில் பாதாள சாக்கடையின் அடைப்பை நீக்க முயன்ற போது துப்புறவுத் தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில் நகராட்சி ஆணையர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் மேலக்காவிரி பகுதியைச் சேர்ந்த சாதிக் பாட்சா, மற்றும் வீரமணி, விபுதரன், பாக்கியராஜ் ஆகிய தனியார் ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்கள் நேற்று மாலை சுமார் ஆறரை மணியளவில் ரயில் நிலையம் எதிரே உள்ள பாதாள சாக்கடையின் அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, குழாயை உள்ளே செலுத்திக்கொண்டிருந்த போது சாதிக் பாட்சா நிலை தடுமாறி பாதாள சாக்கடைக்குள் விழுந்தார். இதனைக் கண்ட சக தொழிலாளர்கள் அவரைக் காப்பாற்றாமல் ஓடி விட்டனர்.
சாக்கடைக்குள் சுமார் 5 அடி ஆழத்திற்கு சேறும் சகதியுமாக இருந்ததால் சாதிக் பாட்சா வெளியே வர முடியாமலும், விஷ வாயுவால் மூச்சு விட முடியாமலும் தவித்தார். இதனைக் கண்ட பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். ஆனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தாமதமாக தீயணைப்பு படையினர் வந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ரயில் நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணியில் தொழிலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். பின்னர் தீயணைப்பு துறை ஊழியர் காளிதாஸ் பாதாள சாக்கடைக்குள் இறங்கி சாதிக் பாட்சாவின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தார்.
இந்நிலையில், உயிரிழந்த சாதிக் பாட்ஷாவின் தாய் ஜாரியா, மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், தனியார் ஒப்பந்தகாரர் மற்றும் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜெகதீசன் நகர்நல அலுவலர் பிரேமா மற்றும் நகராட்சி சுகாதார கண்காணிப்பாளர் உள்ளிட்ட 4 பேர் மீது பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணிசெய்ய வைத்ததாக தொழிலாளர் நல சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே உயிரிழந்த தொழிலாளின் குடும்பத்திற்கு நகராட்சி சார்பில் முதற்கட்ட இழப்பீடாக ரூ.11.50 லட்சம் வழங்கப்பட்டது.
Newstm.in
newstm.in