மேம்பால பணியால் நெரிசலில் சிக்கி தவிக்கும் ஆம்புலன்ஸ்கள் !
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கட்டப்படும் மேம்பாலங்களால் அவசர ஊர்தி மற்றும் பொதுமக்கள் சிக்கித்தவிப்பதால் மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகரத்தில் இருந்து துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், ஊட்டி செல்பவர்கள் கவுண்டம்பாளையம் சாலையை கடந்துதான் செல்ல வேண்டும். மேலும் கவுண்டம்பாளையம் பகுதியில் இருந்து பெரிய நாயக்கன் பாளையம் வரை தொழிற்சாலைகள், பள்ளி , கல்லூரிகள், அரசு ஐ டி ஐ, ஹோமியோபதி கல்லூரி , மருத்துவமனைகள் என ஏராளம் இருக்கின்றன.
இதில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள் என ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இப்பாதையை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கவுண்டம்பாளையம், மற்றும் கவுண்டர் மில் பகுதியில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது.
மேம்பால பணிகள் நடைபெறுவதால் கவுண்டம்பாளையம் மற்றும் கவுண்டர் மில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அரைமணி முதல் முக்கால்மணி நேரம் வரை காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த போக்குவரத்து நெரிசலில் அவசர ஊர்தி மாட்டிக்கொண்டு போராடி செல்ல வேண்டியதால், பாதிக்கப்பட்டவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் ஒரு சில இறப்புகள் ஏற்பட காரணமாக அமைகிறது.
மேலும் கவுண்டம்பாளையம் பகுதியில் தோண்டப்படும் குழிகளால், மின்சாரம் இல்லாமல் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள் மேம்பாலத்திற்காக தோண்டப்பட்ட குழிகளில் விழும் அபாயம் உள்ளது என கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் ஆரம்பித்துவிட்டால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என கூறும் வாகன ஓட்டிகள் மேட்டுப்பாளையம் சாலையை, துடியலூர் வரை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
newstm.in
newstm.in