உலகமே மாறினாலும் அதிமுக - அமமுக இணையாது: அமைச்சர் ஜெயக்குமார்
உலகமே மாறினாலும் அதிமுக மற்றும் அமமுக கட்சிகள் இணையாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பான கேள்விக்கு, அதிமுக ஆட்சியில் 10 முதல் 15 சதவீதம் தான் சிலைக்கடத்தல் நடைபெற்றதாகவும், திமுக ஆட்சியில் தான் அதிகம் நடந்துள்ளதாகவும் தெரிவித்ததார். மேலும், அதிமுக அரசு வெளிப்படையான தன்மையுடன் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி ஏற்படவில்லை என்றும், இலங்கையில் நடந்த விஷயத்தை யாரும் மறந்துவிடக்கூடாது என்றும் தெரிவித்த அவர், கடந்த 10 ஆண்டு காலத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி எந்த வளர்ச்சி திட்டத்தையும் கொண்டுவரவில்லை எனவும் கூறினார்.
மத்திய சென்னையில் பாமக வெற்றியை தடுக்க திமுக தான் பணப்பட்டுவாடா செய்துவருவதாக குற்றம் சாட்டிய அவர், காவிரிப்பாசனப்பகுதியில் உள்ள விளைநிலங்களை பங்குபோட்டு விற்றது திமுக தான் எனவும், அதனை திசைதிருப்பவே தற்போது அது தொடர்பான வீடியோக்களை திமுக பரப்பி வருவதாக கூறினார்.
அதிமுகவில் அமமுக இணைவது என்பது நடக்காத விஷயம் என்று கூறிய அவர், அறுந்த உறவு அறுந்தது தான் என்றும், உலகமே மாறினாலும் இந்த இணைப்பு சாத்தியமில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
newstm.in
newstm.in