ரூ.50,000 க்காக கைக்குழந்தையை தவிக்க விட்டு தற்கொலை செய்த இளம் பெண்! அதிர்ச்சியில் பெற்றோர்!
ஈரோடு மாவட்டம் பவானி அருகே திருமணமான சில வருடங்களில் இளம்பெண் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே வரதநல்லூர் பகுதியில் சந்திரசேகர் - சுகன்யா தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்தத் தம்பதிக்கு 10 மாதமே ஆன பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இரவு முதல் சுகன்யாவை காணவில்லை என்பதால் அவரது கணவரும் உறவினர்களும் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சுகன்யா கிடைக்கவில்லை. காலையில் வீட்டின் அருகே இருந்த கிணற்றில் சுகன்யா சடலமாக மிதந்ததைப் பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பவானி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுகன்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் வரதட்சணை கொடுமையால் சுகன்யா உயிரிழந்ததாக அவரது பெற்றோர் புகார் கொடுக்க காவல் துறையினரும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
சுகன்யாவின் பெற்றோரிடம் தொழில் செய்வதற்காக கணவர் சந்திரசேகர் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் கடனை திருப்பித் தராததால் எனது பெற்றோரிடம் வாங்கிய கடனை திருப்பித் தாருங்கள் என கணவர் சந்திரசேகரிடம் சுகன்யா கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக சுகன்யா மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் தான் அவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வரதட்சணை கொடுமையால் சுகன்யா உயிரிழந்தாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in
newstm.in