மாவோயிஸ்ட் மனைவி, சகோதரிக்கு 3 நாள் பரோல்!
கேரள வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சேலத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக அவரது மனைவி மற்றும் சகோதரிக்கு நீதிமன்றம் 3 நாள் பரோல் வழங்கியுள்ளது.
சேலம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள கணவாய்புதூர்காடு, ராமமூர்த்ததி நகரை சேர்ந்த மணிவாசகம் தமிழக மாவோயிஸ்ட் அமைப்பின் தலைமை பொறுப்பாளராக இருந்தார். இவரது மனைவி கலா, சகோதரி சந்திரா, சகோதரியின் கணவர் சுந்தரமூர்த்தி ஆகியோரும் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்தவர்கள். திருச்சி பெண்கள் சிறையில் கலா, சந்திரா ஆகியோரும் சென்னை புழல் சிறையில் சுந்தரமூர்த்தியும் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாவோயிஸ்ட் மணிவாசகம் சிறு வயது முதல் மாவோயிஸ்ட் அமைப்பில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்ததால் அவர் மீது பல்வேறு வழக்குகளை காவல் துறை பதிவு செய்துள்ளது. காவல் துறை தேடுதலில் இருந்து தப்பி வந்த மாவோயிஸ்ட் மணிவாசகம், கடந்த 29 ம் தேதி கேரள வனப்பகுதியில் பதுங்கியிருந்தார். அப்போது, கேரள மாநிலம் தண்டர் போல்ட் படைக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் மணிவாசகத்தை அதிரடிப்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து கேரளா, திருச்சூர் அரசு மருத்துவமனையில் மணிவாசகத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் கேரள நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து மணிவாசகத்தின் சடலத்தை அவரின் மற்றோரு சகோதரி லட்சுமி, அவரது கணவர் சாலிவாகனம் ஆகியோர் இன்று ஆம்புலன்ஸ் மூலம் சேலம் கொண்டு வந்தனர்.
இதனிடையே திருச்சி சிறையில் உள்ள மணிவாசகத்தின் மனைவி கலா மற்றும் சகோதரி சந்திரா ஆகியோர் மணிவாசகத்தின் இறுதி சடங்கில் பங்கேற்க உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பரோல் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கலா மற்றம் சந்திரா ஆகியோருக்கு 3 நாள் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Newstm.in
newstm.in