2வது கணவன் எட்டி உதைத்ததில் குழந்தை பலி... கதறும் தாய்..
சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் இந்திரா நகர் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் கங்கா(26). கணவரை இழந்த இவர், தனது 3 வயது மகன் அருணுடன் வசித்து வந்தார். இதனிடையே கட்டிட வேலை செய்துவந்த இவர், அவருடன் வேலை பார்த்து வந்த கொத்தனார் வெங்கடேசன் (35) என்பவரை 2வது திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், கங்கா, தனது மகன் அருணை, வெங்கடேசனிடம் ஒப்படைத்துவிட்டு அவரது சொந்த ஊரான கேரளாவுக்கு அவசர வேலையாக சென்றுவிட்டார். இதனிடையே, அருண் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கங்காவுக்கு, வெங்கடேசன் செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். அதிர்ச்சியடைந்த கங்கா, சென்னை வருவதற்குள், அருண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உணர்ந்த கங்கா, இது குறித்து பள்ளிக்கரணை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்குள்ளாக வெங்கடேசன் தலைமறைவானார். சந்தேகம் உறுதியான நிலையில், வெங்கடேசனை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். கள்ளக்குறிச்சியில் பதுங்கியிருந்த வெங்கடேசனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், பல அதிர்ச்சி தகவல்களை வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
அதாவது, கங்காவை 2 வது திருமணம் செய்து கொண்ட அவருக்கு, 3வயது குழந்தை இடையூறாக இருந்துள்ளது. இன்னொருவரின் குழந்தையை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் அருண் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கங்கா ஊருக்கு சென்றபோது, அருண் திடிரென மாயமாகியுள்ளார். அவனை தேடியபோது, பக்கத்து வீட்டில் சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளான். அங்கு சாப்பிடுவது பிடிக்காத வெங்கடேசன், அருணை வலுகட்டாயமாக வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
மேலும், ஆத்திரத்தில் அவனை அடித்ததுடன் கால்களால் எட்டி உதைத்துள்ளார். இதில் கீழே விழுந்த அருணின் தலை தலையில் மோதியதில் அவன் மயங்கி விழுந்துள்ளான். அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன், அருணை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால், மருத்துவர்கள் அவரிடம் பல கேள்விகள் கேட்டதால் பயந்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
Newstm.in
newstm.in